Friday 1 November 2013

பாதுகாப்பாக வெடி வெடிப்பது எப்படி ? தீக்காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது ?

முதல் உதவி… செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்சத்தம் இல்லா தீபாவளியே என்னை கொண்டாடு !!பாதுகாப்பான முறையில், வெடி விபத்துக்கள் இல்லாமல் தீபாவளியை பாதுகாப்பான முறையில் தீபாவளியைக் கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் ஒவ்வரு ஆண்டும் விழிப்புணர்வுடன் இருப்பார்கள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் .அவர்களை நாம் இந்த தருணத்தில் பாராட்டியே ஆகவேண்டும்தீபாவளி வந்தாச்சு! புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வீடே அமர்க்களப்படும். எல்லாமும் இனிதாக நடக்க வேண்டிய நேரத்தில்தான் நாம் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.
பட்டாசைத் தவிர்க்கலாம்!
கூடுமானவரை பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம். ஏனென்றால், விபத்து அபாயம், அதீத சத்தம், புகை என்று பட்டாசு உண்டாக்கும் கண நேர சந்தோஷத்தைக் காட்டிலும் மோசமான விஷயங்களே அதிகம். அப்படி மீறி பட்டாசு வெடித்துதான் ஆக வேண்டும் என்று நினைத்தால், அதிக அபாயம் இல்லாத பட்டாசு வகைகளைத் தேர்ந்தெடுங்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடியுங்கள்!
பாதுகாப்பாக வெடி வெடிப்பது எப்படி?
நெருக்கமான வீடுகள், மக்கள் அடர்த்தி மிக்க இடங்களில் இருந்தால், அங்கே பட்டாசு வெடிப்பதைத் தவிருங்கள். பட்டாசு வெடிக்கும் இடம் திறந்தவெளியாக இருக்கட்டும். வெடிகளை வெடிக்கும் முன் ஒரு வாளி தண்ணீர், மணல் போன்ற தீயணைப்புப் பொருட்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைகள் வெடிப்பதாக இருந்தால், அருகில் கட்டாயம் பெரியவர்கள் இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணி அணிந்து இருப்பதும் அணிந்திருக்கும் உடை பருத்தி ஆடைகளாக இருப்பதும் முக்கியம். பாட்டில் மற்றும் டின்களில் வைத்துப் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிருங்கள். அதேபோல, பந்தாவுக்காக கையில் பிடித்தவாறு பட்டாசுகளைக் கொளுத்தாதீர்கள். கம்பி மத்தாப்புக்களைக் கொளுத்தி முடித்ததும் அந்தக் கம்பிகளைத் தண்ணீரில் போட வேண்டும்.
தீக்காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது?
உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது கண்களில் பட்டாசுத் துகள்கள் பட்டாலோ உடனே தண்ணீரில் தொடர்ந்து கழுவ வேண்டும். எரிச்சல் குறையும் வரை கழுவிவிட்டு, உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். இந்தச் சமயங்களில் குளிர்ந்த நீரை உபயோகப்படுத்தினால் ரத்த ஓட்டம் குறைந்து பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதனால், சாதாரண நீரையே பயன்படுத்துங்கள். உடலில் தீ பட்ட இடத்தில் துணிகள் ஒட்டிக்கொண்டு இருந்தால் உடனே அதை வேகமாக கழற்றக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது சிறிய அளவில் புண் ஏற்பட்டுவிட்டால், அந்த இடத்தில் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவினாலே போதும். அவசர உதவிக்கு 108 எண்ணுக்குச் சுழற்றுங்கள்!
ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பும், தீபாவளி தினத்தன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம்.
1. முதலில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையளர்களிடமே பட்டாசுகளை வாங்குங்கள். தரமற்ற போலியான பட்டாசுகளை விற்ப்பவர்களிடமிருந்து வாங்கிய பட்டாசுகள், நீங்கள் பற்றவைத்தவுடன் வெடிக்காமல் உங்கள் பணத்துக்கு வேட்டு வைக்ககூடிய வாய்ப்பு அதிகம். அல்லது, எதிர்பாராத நேரத்தில் வெடித்து அதிர்ச்சியடையவும் வைத்துவிடும்.
2. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பூவினை கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து, அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு பட்டாசையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம்.
3. தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது தயாரிக்கப்படும் இடங்களைத் தவிர்த்து, குறிப்பாக விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்தவெளிகளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே நல்லது.
4. தண்ணீர். இது நெருப்பை அணைப்பதற்கு மட்டுமல்ல; ஒருவெளை நமது உடலில் தீக்காயம் பட்டுவிட்டால் உடனடியாக பயன்படுத்தக்கூடிய முதல் உதவி மருந்தும்கூட. எனவே ஒரு பக்கெட் தண்ணீராவது நீங்கள் பட்டாசு வெடிக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
5. ஒரேநேரத்தில் ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்துக்குக் காரணமாகலாம்.
6. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒருபோதும் அதனை கையில் எடுப்பதற்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம்.
7. நீங்கள் தைரியசாலிகள்தான். ஆனாலும் குழந்தைகள் எந்த பட்டாசையும் தனியே கொளுத்த அனுமதிக்ககூடாது.
8. நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்காமல் போனால், பத்து நிமிடம் வரை பொறுமையாக காத்திருந்து ஒரு பக்கெட் தண்ணீரில் அந்த பட்டாசை நீரினுள் நன்றாக மூழ்கவைத்து செயலிழக்க வைக்க வேண்டும்.
9. பட்டாசுகளை எக்காரணம் கொண்டும் பத்திரப்படுத்தி ‘ஸ்டாக்’ வைப்பது ஆபத்தானது. தீபாவளி பட்டாசுகளில் எஞ்சியவற்றை சிலர் கார்த்திகைக்காக வைத்திருப்பது வழக்கம். இந்த பழக்கத்தை கைவிடுங்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில், அவற்றை வெப்பம் குறைந்த இடத்தில், குழந்தைகள் பயன்படுத்தாத இடத்தில் வேண்டுமானால் பத்திரப்படுத்தி வைக்கலாம்.
10. நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். இப்படிச் செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
11. பட்டாசுகளை பற்றவைக்கும்போது மற்ற பட்டாசுகளை அவற்றுக்குரிய பைகளிலோ அல்லது பெட்டியிலோ வைத்துக்கொண்டு, உபயோகிக்கும் பட்டாசை மட்டுமே பற்றவைக்க வேண்டும். இது மற்ற பட்டாசுகளும் சேர்ந்து வெடித்து விபத்து மற்றும் சேதம் ஏற்ப்படுத்துவதை தவிர்க்கும்.
12. ஒரு பட்டாசை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல.
13. நீங்கள் பட்டாசை பற்றவைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும் விதமாக பாதுகாப்புக் கண்ணாடி (Plain Spectacle) அணிந்து கொள்வது நல்லது.
14. மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்துவது த்ரில்லிங்காக இருக்கலாம். ஆனால், அவை ஆபத்தானவை மட்டுமல்ல, தடை செய்யப்பட்ட பட்டாசுகளை கொளுத்தி விளையாடுவது சட்டப்படி குற்றம் ஆகும்.
15. எரிந்து முடிந்த மத்தாப்பூக்கள் மற்றும் பட்டாசுகளை மற்றவர்கள் மீதும் மிருகங்கள் மீதும் எரிந்து விளையாடுவது மனிதத் தன்மையற்ற மற்றும் குரூரமான செயலாகும்.
16. செய்தித்தாள்கள் மூலமாகவும், கடைக்காரரிடம் விசாரிப்பதன் மூலமாகவும் நீங்கள் வாங்கும் பட்டாசு உங்கள் ஊரில் தடை செய்யப்பட்டாதா? அதனை நீங்கள் பயன்படுத்தலாமா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
17. குழந்தைகளும் சிறுவர்களும் எந்த சிறிய வகை பட்டாசுகளைக்கூட தன்னிச்சையாகக் கொளுத்துவதற்கு தாராளமாக அனுமதிப்பது தவறு. பெரியவர்கள் அல்லது பெற்றோர் மேற்பார்வையில் பட்டாசுகளை கொளுத்த அனுமதிப்பதே சிறந்தது.
18. பட்டாசைக் கொளுத்தி விளையாடும் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்துவது அறிவுடைமை.
19. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது.
20. மதுபானம் அருந்திவிட்டு உங்களோடு பட்டாசு கொளுத்தி விளையாட, அல்லது உதவி செய்ய யாராவது வந்தால் அவர்களைத் தவிர்ப்பது, உங்களுக்கும் நல்லது, அவர்களுக்கும் நல்லது.
21. பட்டாசு வெடிக்கும் குழந்தைகளும், அவர்களுக்கு உதவியாகச் செயபடும் பெரியவர்களும் கண்டிப்பாக கால்களில் ஷூக்களோ அல்லது செருப்புகளோ அணிந்துகொண்டே பட்டாசுகளைக் கொளுத்தி விளையாட வேண்டும்.
22. ராக்கெட்டுகளை குடியிருப்பு பகுதிகளில் உபயோகிப்பதையும், மாணவர்கள், முதியோர்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
23. வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப்போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால், பெரிய விபத்துகளை தவிர்க்கலாம்.
24. தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம்.
முதல் உதவி… செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்!
1. எதிர்பாராதவிதமாக பட்டாசால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர், ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
2. வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
3. தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மென்ட் போன்றவற்றை போடக்கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்ப்பட்டுள்ளது என்பதை சரியாகச் தெரிந்து கொள்ளமுடியாமல் போய்விடும், மேலும் அவற்றைச் சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும்.
4. குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது காற்றில் பறக்கக்கூடிய ஆடைகளை அணிவது கூடாது. குறிப்பாக பெண்குழந்தைகள் பாவாடை போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு கொளுத்தும்போது எரியும் விளக்கின் நெருப்பு பாவாடையில் பட்டு விபத்து ஏற்படுவதற்க்கான வாய்ப்பு அதிகம். பட்டாசு கொளுத்தும்போது நைலான், பட்டு போன்ற துணிகளை அணியவே கூடாது.
5. தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும்.
6. எந்த வெடியையும் கையில் வைத்துக் கொளுத்தக்கூடாது.
7. புஸ்வானம் எரியவில்லை என்றால், கையில் எடுத்துப் பார்க்கக்கூடாது. திடீரென்று வெடித்து விபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
8. திரி எரிந்தும் வெடிக்காத வெடிகளை கையில் எடுத்துப் பார்ப்பதோ, மீண்டும் பற்ற வைப்பதோ கூடாது.
9. ராக்கெட்டை பாட்டிலில் வைத்துக் கொளுத்துவதும் ஆபத்தானதே.
10. குடிசைகள் உள்ள இடங்களிலோ, மனிதர் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களிலோ வெடி வெடிப்பதைத் தவிர்க்கலாம். அல்லது, கவனமாக நான்கு புறமும் கவனித்து வெடிகளை வெடிக்க வெண்டும்.
11. நீளமான மத்தாப்புக்களை வைத்துக் கொண்டே வெடிகளை வெடிக்க வேண்டும். வெடிகளைப் பற்ற வைக்கும்போது தலையை கீழே குனிந்து முகத்தை அருகில் கொண்டு சென்று ஒருபோதும் வெடிக்கக்கூடாது. ஏனெனில், விபத்து ஏற்பட்டால் விபத்துடன் வெடிப்பொருட்கள் முகத்தின் தோல் வழியே உள்ளே சென்று முகத்தில் நிரந்தர கரும்புள்ளிகளை ஏற்படுத்தி விடலாம்.
12. வெடிக்காத வெடிகளைத் தேடி எடுத்து மொத்தமாக போகி கொளுத்துவது மிகவும் ஆபத்தானது.
கண் பாதுகாப்பு …
பல நேரங்களில் பட்டாசு மற்றும் தீ விபத்துகளின்போது முதல் உதவி என்ற பெயரில் எதையாவது செய்து கண் உட்பட உடலின் பல உறுப்புகளையும் கெடுத்துக் கொள்வதும், யார் என்ன சொன்னாலும் உடனே அத்தனையயும் செய்துவிடுவதும்,மேலும் இது குறித்து பல ஊகங்களும் உள்ளன. உண்மை நிலையை முறையாகத் தெரிந்து கொள்வதே சிறந்தது.
1. பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது.ஆனால் கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிற்ந்த காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை. உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
2. கண் விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கண்களைக் கசக்குவதனால் இரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகறிக்கலாம்.
3. ஒரு குழந்தையின் கண்களை பாட்டில் ராக்கெட், அல்லது வேறு மத்தப்பு தீவிரமாகத் தாக்கிவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் தெரியுமா? கண்ணைச் சுற்றிப் பாதுகாப்பாக ஒரு பேப்பர் கப் ஒன்றினை முகத்தினில் வைத்து கண்ணை அழுத்தாதவாறு டேப்பினால் ஒட்டி அல்லது பாதுக்காப்புக்கான பேட்ச் அணிவித்து உடனடியாக கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
4. நெருப்புக்காயத்தினால் காயம் பட்ட குழந்தைய மருத்ட்துவமனைகு அழைத்துச் செல்வதற்கு முன்பு வலி நிவாரணியாக எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோஃபேன் போன்றமருந்துகளை வலியைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுப்பது தவறு. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்ககூடாது. இபுப்ரோஃபேன் இரத்தக் குழாய்களை மென்மையானதாக்கி விடும். எனவே இரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே, ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.
5. தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? முதலில் காயம்பட்ட குழந்தையை சமாதானம் செய்து அமைதிப்படுத்த வேண்டும். சில பெற்றோர்கள் குழந்தைகளை கோபித்து அதிகமாகத் திட்டி மன அளவில் மேலும் பாதிப்பை ஏற்ப்படுத்துவார்கள். இது தவறு. ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விபத்து ஏற்ப்படுவது உடல் நலம் மட்டுமல்ல; மன நலம் சார்ந்த பிரச்னையும் கூட. ஆம், பாதுகாப்பான தீபாவளியே அனைரும் விரும்புவது!
பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்!
அனைவருக்கும் ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!
தகவலுக்கு நன்றி
கட்டுரையாசிரியர்: அ.போ. இருங்கோவேள் – மருத்துவ சமூகவியலாளர் (Medical Sociologist)

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home